வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்கள் இனி தப்ப முடியாது: மென்பொருள் மூலம் தகவல் திரட்ட திட்டம்
அரசுக்கு வருமான வரி செலுத்தாமல், சாமர்த்தியமாக காலம் தள்ளிக் கொண்டிருப்போரை மடக்கிப் பிடித்து, வரி வளையத்திற்குள் கொண்டுவர, மத்திய நிதியமைச்சகம் அதிரடித் திட்டம் தீட்டியுள்ளது. மத்திய அரசு ரகசியமாக உருவாக்கி வரும் நுண்ணறிவுத் திட்டத்தை அமல்படுத்த, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்கள் தொகையில், சீனாவுக்கு அடுத்தபடியாக, 127 கோடி பேருடன் இரண்டாமிடம் வகிக்கும் இந்தியாவில், வரி செலுத்துவோர், 3 சதவீதம் பேர் மட்டுமே. கொழுத்த வருமானம் வந்தாலும், பல தில்லுமுல்லுகளை செய்து, ஏராளமானோர் வரி செலுத்தாமல் தப்பி வருகின்றனர். பலர், வருவாயை குறைத்து காட்டி, வரியை குறைத்து செலுத்தி வருகின்றனர்.
நுண்ணறிவு திட்டம்:
வரி ஏய்ப்பு செய்பவர்களையும், வரி செலுத்தாமல் தப்பித்து வருபவர்களையும் வரி வளையத்திற்குள் கொண்டு வர, மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 'புராஜக்ட் இன்சைட்' எனப்படும், நுண்ணறிவு திட்டத்தை நிதியமைச்சகம் உருவாக்கி உள்ளது. இதற்காக, தகவல் ஆய்வு மென்பொருள் மற்றும் தேவையான கட்டமைப்பை உருவாக்கித் தர, ஒப்பந்தப்
புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்தப்புள்ளியில் பங்குபெறும் நிறுவனங்கள், திட்டம் தொடர்பான எவ்வித தகவலும் வெளியே செல்லாமல், ரகசியமாக பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த, ஊழியர்களை நியமிப்பதற்கான விளம்பரங்களை, வருமான வரித்துறை இயக்குனரகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
நடைமுறைக்கு வரும்:
தகவல் சேமிப்பு, தகவல் பரிமாற்றம், தகவல் மேலாண்மை, நிர்வாக செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் உடையவர்கள், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்
படுகிறது. நுண்ணறிவு திட்டம் மூலம், பெறப்படும் தகவல்களை வைத்து, வரி ஏய்ப்பாளர்களிடமிருந்து எந்தளவுக்கு வரி வசூலிக்க முடியும் என்பதை நிர்ணயிக்க முடியும். அதிகளவில் வரி
செலுத்தாமல் ஏய்ப்பவர்கள் வரிசைப்படி பட்டியலில் இடம் பெறுவர்.
கையாளப்படும்:
அப்பட்டியல் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்டோரின் வீட்டு கதவுகளை தட்டுவர்.வரி வளையத்தை விரிவுபடுத்துவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள், நுண்ணறிவுத் திட்டத்தின் கீழ் கையாளப்படும். தகவல் ஆய்வு, எச்சரிக்கை விடுப்பு மேலாண்மை, வரி ஏய்ப்பாளர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுதல், அடுத்த கட்ட நடவடிக்கை போன்றவை, நுண்ணறிவு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என, பார்லிமென்ட் நிலைக்குழு, கடந்த ஏப்ரலில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிக்குவது எப்படி?
நுண்ணறிவுத் திட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக, 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண் பயன்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன. சமீபகாலமாக, பெரிய நிதிப் பரிவர்த்தனைகள் அனைத்தும், 'பான்' எண்ணை குறிப்பிட்டே நடக்கின்றன. குறிப்பிட்ட, 'பான்' எண்ணில் நிகழும் பரிவர்த்தனைகளை வைத்து, அவர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறாரா? அப்படி தாக்கல் செய்திருந்தால், சரியான தகவல்களை தந்துள்ளாரா? என்பன போன்ற பல்வேறு விவரங்களை பெற்று விட முடியும். நுண்ணறிவுத் திட்டம் மூலம் உருவாக்கப்படும் மென்பொருள், வருமான வரி ஏய்ப்புகளை வெகு சுலபத்தில் கண்டுபிடித்து விடும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.